Script

Wednesday, September 24, 2014

நீதிக் கதைகள் - சோம்பித் திரியேல்

           ஒரு ஊரில் ஒரு விவசாயக் குடிமகன் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். தந்தை நிலத்தில் வியர்வை சிந்திப் பாடுபடுவார். மகன்களோ சோம்பேறிகளாக ஊரைச் சுற்றித் திரிவார்கள்.

           விவசாயி தன் மகன்களை விவசாயத்தில் பழக்க அவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அவர்கள் உழுது பயிரிட முன்வரவில்லை. அதற்காக வருந்தினார் விவசாயி.


           புத்திரர்கள் உழைக்க மறுக்கிறார்களே, சோம்பேறித்தனமாக இருக்கிறார்களே! என்று கவலைப்பட்டு மனம் நொந்து நோயாளியாகிப் படுத்து விட்டார்.

           வைத்தியர் வந்து பார்த்துவிட்டு, "இது நோயல்ல, மனக் கவலையே" என்று கூறினார். மகன்கள் நான்கு பெரும் தந்தைக்கு கவலையை விட்டுவிடும்படி அறிவுரை கூறினார்களேயன்றி, அவர்கள் உழைக்க முன்வரவில்லை.

           விவசாயத் தந்தையின் அந்திமக் காலமும் நெருங்கி விட்டது. தன் மகன்கள் நால்வரையும் அழைத்தார் விவசாயி.

           "நான் இனிப் பிழைக்கமாட்டேன். உங்கள் நால்வருக்காக என் தந்தையின் சொத்துக்களை விற்று தங்க நாணயங்களாக மாற்றி இந்த வயலின் எங்கோ ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்தேன். எந்த இடம் என்று இப்போது ஞாபகமில்லை. அதை எப்படியாவது கண்டுபிடித்து, எடுத்துப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு இறந்துவிட்டார்.

           தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்ட மகன்கள் நால்வரும் வயலுக்குச் சென்று பூமியைக் கொத்திப் புதையலைத் தேட ஆரம்பித்தனர்.

           வயல் முழுவதும் நன்றாகக் கொத்திச் சுத்தமாக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு விட்டது. புதையல் கிடைக்கவில்லை. என்றாலும் தங்கள் உழைப்பு வீணாகாமல், வயலில் நெல் சாகுபடி செய்தனர். மழையும் நன்றாகக் காலந்தவறாமல் பெய்தது. நெல்லும் நல்ல விளைச்சல் கண்டது.

           நெல் மூலம் மிகுந்த வருமானம் பெற்ற மகன்கள், "தந்தை சொன்ன புதையல் இதுதான் - இந்த நிலமும் நம் உழைப்பும்தான்" என்பதை நன்கு உணர்ந்தனர். உழைப்பாளிகளாகவும் மாறினார்கள்.

நீதி: உழைப்பே உயர்வுக்கு உறுதுணை

Tuesday, September 23, 2014

பீர்பால் கதைகள் - குட்டு வெளிப்பட்டது

           வெளிநாடுகளில் சென்று திரவியம் தேடிச் சம்பாதிக்கும் ஒரு வயதான முதிர்ந்த தனவான் பீர்பாலின் வீட்டருகில் குடியிருந்தார். அவர் தேவாலய தரிசனம் செய்வதற்காக சிறிது பொற்காசுகளோடு புறப்பட்டுச் சென்றார்.

           ஒரு காட்டின் நடுவில் பாடல் பெற்ற ஸ்தலம் ஒன்று இருந்தது. கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பினால் நன்றாக இருட்டிவிடும். பணப்ப்பையோடு செல்வது ஆபத்து என்று அறிந்தார். ஆதலால் அதை எப்படி பத்திரப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தார், புளிய மரத்தின் நிழலில்.

           அந்தக் கோவிலுக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவன் இவரைப் பார்த்துவிட்டு அருகில் வந்தான். "என்ன பெரியய்யா? கோவிலுக்குப் போகிறீர்களா! இருட்டிவிட்டது பத்திரமாகப் போய் வாருங்கள்" என்று கூறினான்.

           அவன் அவருடைய ஊர்க்காரன் மெட்டுமல்ல, அந்தத் தெருவிலேயே குடியிருப்பவனும் கூட. அவனிடம் அந்தத் தனவான், "தம்பி, நீயா? நீ இங்கு வருவது தெரிந்திருந்தால் உன்னுடன் வந்திருப்பேனே" என்றார்.

           "சரி, எனக்கு ஒரு உபகாரம் செய்வாயா?" என்றார் தனவான்.

           "என்ன பெரியய்யா அப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் காலால் இட்டால் தலையால் செய்வேன்" என பணிவுடன் கூறினான்.

           "தம்பி, இந்தப் பையில் ஆயிரம் பொற்காசுகள் இருக்கின்றன. நான் பல கோவில்களுக்கும் சென்று வர வேண்டும்.திரும்பி வந்ததும் வாங்கிக் கொள்கிறேன். அதுவரை இதைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். உன்னால் முடியுமா?" என்றார்.

           அவன் "இந்தப் புளியமரம் சாட்சியாக இதைப் பாதுகாப்பேன்" என்று சொல்லி அந்தப் பண முடிப்பை வாங்கிக் கொண்டான். தனவந்தரும் ஆலய தரிசனத்திற்காகப் புறப்பட்டுப் போனார். பக்கத்துக்கு வீட்டுக்காரனும் ஊருக்குப் புறப்பட்டுப் போனான்.


           தனவந்தர் சிறிதுகாலம் சென்று ஊர் திரும்பினார். பக்கத்துக்கு வீடுக்கரனிடம் சென்று பண முடிப்பைக் கேட்டார்.

           அவன் ஒன்றும் அறியாதவன் போல நடித்தான். "பண முடிப்பா?.. ஆயிரம் பொற்காசுகள்... என்ன இது, கேலியா, கிண்டலா?... இல்லை புத்தி மாறாட்டம் ஏற்பட்டுவிட்டதா? இல்லை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டீர்களா? அப்படித்தானிருக்கும். அவர்களிடம் போய்க் கேளும். என்னிடம் வந்து ஏன் தொல்லை கொடுக்கிறீர்கள்" என்று கூறிவிட்டான்.

           தனவந்தர் நயமாகவும், மிரட்டியும் பார்த்தார். அவன் மசியவில்லை. மறுத்து விட்டான்.  அவமானப்ப்படும்படி திட்டினான். தனவந்தருக்கு வேறுவழி தோன்றவில்லை. நேராகப் போய் பீர்பாலிடம் முறையிட்டார்.

           அதற்கு பீர்பால், "பெரியவரே, நீர் வருத்தப்பட வேண்டாம். உங்களுடைய பண முடிப்பு உங்களுக்குக் சிடிக்க முயற்சிக்கிறேன். நாளை அரண்மனைக்கு வாருங்கள்" என்று கூறி, தனவந்தரை அனுப்பி வைத்தார்.

மறுநாள் அரண்மனைக்கு வந்த தனவந்தர் அரசரிடம் முறையிட்டார். அதற்கு அரசர் பீர்பாலிடம் "நீரே இந்த வழக்கை விசாரியும்" என்று கூறினார்.

           பீர்பால் அந்த பக்கத்து வீட்டுக்காரனை அழைத்து வரச் சொன்னார். அவன் பீர்பால் முன் பணிவுடன் வந்து நின்றான்.

           "தம்பி, இந்த பெரியவர் உன்னிடம் உன்னிடம் ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தாரா?" என்று கேட்டார் பீர்பால்.

           "இல்லை அய்யா! இவர் பொய் சொல்கிறார். இவர் எங்கு யாரிடம் கொடுத்து ஏமாந்தாரோ! சொல்வதெல்லாம் பொய்" என்று சப்தமிட்டு சொன்னான்.

           "பெரியவரே, நீங்கள் இவனிடம் பண முடிப்பைக் கொடுத்ததற்கு சாட்சியுண்டா?" என்று கேட்டார் பீர்பால்.

           "இல்லை அய்யா! காட்டு வழியில் ஒரு புளிய மரத்தின் கீழ்தான் இவனிடம் என் பண முடிப்பைக் கொடுத்தேன்" என்றார் தனவந்தர்.

           "பெரியவரே, நீர் சொல்வது பொய் என்று தெரிகிறது. சாட்சிகள் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்தேன் என்றால் எப்படி? உமக்கு எந்தப் புளியமரம் வந்துதான் சாட்சி சொல்ல வேண்டும். போய் அழைத்து வாரும்" என்று கூறினார் பீர்பால்.

           இதைக் கேட்ட தனவந்தருக்கு மிகவும் மனவேதனை ஏற்பட்டது. தன்னைத் தானே நொந்து கொண்டார். பின் பீர்பாலை ஆச்சர்யத்தோடு பார்த்து "அய்யா நியாயமான நீதி கிடைக்குமென்று நம்பினேன். எனது மனவேதனையில் புளிய மரத்தைப் பற்றிச் சொன்னேன். நீங்கள் அந்தப் புளிய மரத்தையே சாட்சிக்கு அழைத்தாள் எப்படி! நடக்ககூடிய காரியம் ஏதாவது சொல்லக் கூடாதா?" என்று பரிதாபத்தோடு கேட்டார்.

           உடனே பக்கத்து வீட்டுக்காரன் உற்சாகத்தோடு, "அந்தப் புளியமரம் இங்கு வந்து சாட்சி சொன்னால், நீங்கள் என்ன தண்டனை அளித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறினான்.

           பீர்பால் அவனைக் கூர்ந்து பார்த்தார். புளியமரம் வந்து சாட்சி சொல்லாது என்ற திட நம்பிக்கையில் இப்படிக் கூறுகிறான் என்று எண்ணினார்.

           பின்னர் பீர்பால், அந்த தனவந்தரைப் பார்த்து "நீங்கள் உடனே அங்கு சென்று அந்த மரத்தை நான் சாட்சிக்கு அழைத்ததாகக் கூறுங்கள். அது நிச்சயம் வரும். உடனடியாகக் கூட்டி வாருங்கள்" என்றார்.

           நம்பிக்கையற்ற தனவந்தர் உத்தரவுப்படி நடக்கத் தீர்மானித்தார். காட்டை நோக்கிப் புறப்பட்டார். பக்கத்து வீட்டுக்காரனுக்கு மிக சந்தோஷம். ஏன் என்றால் மரம் எப்படி இங்கு வரும், பேசும்? என்பதால்.

           வெகு நேரமாகியும் தனவந்தர் வராததைக் கண்ட பீர்பால், எங்கே பெரியவர் போயிருப்பார்?... எவ்வளவு தூரமோ... என்று கூறிக் கொண்டிருந்தார்.

           அதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரன், "அந்தக் காடு இங்கிருந்து சுமார் நான்கு மைலிருக்கும். அங்கு எல்லாமே புளிய மரங்கள்தான். பாவம் இவர் எந்த மரத்தை அழைத்து வருவாரோ" என்று ஏளனமாகக் கூறினான்.

           அதைக் கேட்ட பீர்பால், "அப்படியானால் உனக்கு இது எல்லாம் எப்படித் தெரிந்தது" என்று கேட்டார். அப்போதுதான் அவன் தன முட்டாள்தனமான வார்த்தைகளே தன்னைக் காட்டிக் கொடுத்து விட்டதை உணர்ந்தான்.அவனுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டது.

           காட்டிற்குப் போன தனவந்தர் அப்போது திரும்பி வந்தார். "அய்யா! எனக்கு எந்த மரம் என்று தெரியவில்லை. அடையாளம் காணாததால் அழைத்துவர முடியவில்லை" என்று அழாக்குறையாகக் கூறினார்.

           அதற்கு பீர்பால், வருந்த வேண்டாம் பெரியவரே, அந்தப் புளிய மரம் இங்கு வந்து உங்களுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லிவிட்டுப் போய்விட்டது" என்றார்.

           தனவந்தருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை... பக்கத்து வீட்டுக்காரன் திரு திரு என்று விழித்தான்.

           பீர்பால் அவனைக் கோபமாக "இப்பொழுது நீ என்ன சொல்கிறாய்" என்று கேட்டார்.

           அதற்கு அவன், "அய்யா அய்யா! என்னைத் தண்டித்து விடாதீர்கள். நான் அவருடைய பண முடிப்பை அப்படியே குறைவின்றி ஒப்படைத்து விடுகிறேன்" என்று பீர்பாலின் காலடியில் விழுந்தான்.

           தனவந்தர் பீர்பாலை வாழ்த்தினார்.

Monday, September 22, 2014

நீதிக் கதைகள் - புத்திமான் பலவானாவான்

          ஒரு இடையன்,  தன வெள்ளாடுகளை மழைப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு மந்தையோடு கொண்டு போனான். ஆடுகள் மாலை நேரம் நன்றாக மேய்ந்து கொண்டிருந்தன.

          திடீரென பலமான காற்று வீசியது. சிறிது நேரத்தில் மேகங்கள் திரண்டு ஒளியை மறைத்தன. மழைக்காற்று வீசியது. சற்று நேரத்தில் மழை கொட்ட ஆரம்பித்தது.

          ஆட்டுக்காரன் ஆடுகளை அவசர அவசரமாக விரட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். ஆனால் அதில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை.

          மந்தையை விட்டுப் பிரிந்த ஆடு ஆண் வெள்ளாடு. மிகப்பெரிய ஆடு. கொம்பும் தாடிகளும் நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். தைரியம் மிக்கது. அது தனியாக ஒதுங்கி, புதர்களுக்குள் சென்று உணவு வேட்டையில் ஈடுபட்டிருந்ததால், இந்தக் காற்றையும் மழையையும் எதிர்பார்க்கவில்லை. அதன் கழுத்தில் மணி கட்டியிருந்தான்.

          பெரும் மழை. நன்றாக இருட்டிவிட்டது. புதரிலிருந்து ஓடி வந்த ஆடு, தன சக ஆடுகளைக் காணாது திகைத்தது. பின், வீடு செல்வதற்காக வேகமாக ஓடியது. அப்போது புதர்களுக்கிடையில் குகை ஒன்று இருந்ததைப் பார்த்து விட்டது.

          அதைக் கண்ட ஆடு சட்டென குகைக்குள் நுழைந்து கொண்டது. உள்ளே நுழைந்ததும் தன மீதிருந்த மழை நீரை உதறியது. அப்போது கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி ஒலித்தது.

          ஆடு மோப்பத்தால், இது ஒரு சிங்கம் அல்லது புலியின் குகையாக இருக்கும் என்று எண்ணியது. அதை நிரூபிக்கும் வகையில், எலும்புகள் காலில் இடறின.

          என்றாலும் அது பயந்து விடவில்லை. தைரியத்தை கைவிடவில்லை. வருவது வரட்டும் சந்திப்போம் என்று திடமாகவே இருந்தது.

          அப்பொழுது சிங்கம் குகைக்கு வந்தது, உள்ளே இனம் புரியாத மிருகம் ஒன்று இருப்பதைக் கண்டு, வெளியில் நின்றபடி கர்ஜித்தது.

          "யாரடா அவன், என் குகைக்குள்?" என்று கேட்டது சிங்கம். அதற்கு ஆடு "வாடா வா, இதுவரை 99 சிங்கங்களை கொன்றிருக்கிறேன். உன்னையும் கொன்றால்தான் 100 ஆகி என் விரதம் முடியும். அதற்காகத்தான் வந்தேன். உள்ளே பார்த்தால் நீ இல்லை. நீ வரும்வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. உம... வா சீக்கிரம்..." என்றது ஆடு.

          சிங்கம் இதைக் கேட்டு பயந்து விட்டது. தாமதித்தால் அந்த மிருகமே வெளியில் வந்தால் என்ன செய்வது? என்று எண்ணியபடி பயந்து ஓடியது, மழையில் நனைந்தபடி.




          சிங்கம் ஓடிக்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு நரி வந்தது. "ராஜாவே, எங்கே இப்படி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருகிறீர்கள்?" என்று கேட்டது அந்த நரி.

          "நரியாரே, என் குகைக்குள், ஒரு விசித்திர மிருகம், கொம்புகளும், அடர்ந்த தாடி மீசைகளோடும், கழுத்தில் மணியோடும் இருக்கிறது. அது என்னைக் கொன்று தின்னக் காத்திருப்பதாகக் கூறுகிறது" என்று நடந்தவற்றைக் கூறியது சிங்கம்.

          அதற்கு நரி, "ராஜாவே, நீங்கள் அடையாளங்களைக் கொண்டு பார்த்தால், அது ஒரு வெள்ளாடாகத்தானிருக்க வேண்டும். எதற்கும் வாருங்கள் திரும்ப குகைக்கு போய்ப் பார்க்கலாம். நானும் துணையாக வருகிறேன்" என்றது நரி.

          சிங்கம் சம்மதிக்கவில்லை. இன்னும் அது பயத்தால் நடுங்கியபடியே இருந்தது. நரி, "அரசே, பயப்படாதீர்கள். நான் உங்களோடு வருகிறேன். உங்களுக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டால், நம் வால்களை ஒன்றோடொன்று முடிந்து கொள்ளலாம்" என்று பல விதத்திலும் சொல்லி சிங்கத்தின் பயத்தைப் போக்கியது.

          சிங்கமும் நரியும் சேர்ந்து குகையை நோக்கிச் சென்றன. இவை சேர்ந்து வருவதை அறிந்த வெள்ளாடு, வருவது வரட்டும் என்ற தைரியத்துடன், "வாரும் நரியாரே! ஓடிப்போன சிங்கத்தை கூட்டிவா என்றுதானே உன்னை அனுப்பினேன்? நீ கட்டியே இழுத்து வந்து விட்டாய். நண்பன் என்றால் உன் போன்ற நண்பர்களே உத்தமர்கள். ஏன் வெளியில்  நிற்கிறாய், சிங்கத்தை உள்ளே இழுத்து வா. எனக்குப் பசி அதிகமாகி விட்டது. என் விரதத்தை இன்றோடு முடிக்க வேண்டும்" என்று கூறியது.

          அதைக் கேட்ட சிங்கம், நரி நம்மை ஏமாற்றிக் கூட்டி வந்துவிட்டது என்று எண்ணி, முழு வேகத்தோடு ஓடியது. வாலில் கட்டப்பட்டிருந்த நரி, கல்லிலும் முள்ளிலும் சிக்கி உயிர் விட்டது.

          மழை நின்றது. இன்னும் நாம் குகைக்குள்ளிருப்பது ஆபத்தாக முடியும் எனக் கருதிய வெள்ளாடு வீட்டை நோக்கி வேகமாக ஓடியது.

          நீதி: உயிராபத்தான வேளையில் திடபுத்தியும் தைரியமும்தான் கை கொடுக்கும் 


பீர்பால் கதைகள் - நம்பிக்கை

             முஸ்லிம் மத குரு ஒருவர் அக்பரை காண வந்திருந்தார். அக்பர் மத ஆசாரப்படி அவரை வரவேற்று உபசரித்தார். அவரை வழியனுப்பி வைக்கும்போது நிறைய பரிசுகள் கொடுத்தார்.

             அவர் சென்ற பின் அரசர் பீர்பாலை நோக்கி, "பீர்பால், உங்கள் மதத்திலும் இம்மாதிரி மதகுருக்கள் இருகிறார்களா?" என்று வினாவினார்.

             அதற்கு பீர்பால், "எங்கள் மதத்திலும் இருகிறார்கள். அவர்கள் மலை குகைகளிலோ, ஆசிரமங்களிலோ வசிப்பார்கள். மக்களிடத்தில் அதிகம் தொடர்பு கொள்ளமாட்டார்கள்" என்று சொன்னார்.

             "எங்களுடைய மத குருக்கள் சகல சக்திகளும் கைவரப் பெற்றவர்கள். அவர்களை வணங்குவதாலேயே பல காரியங்களும் சித்தி பெரும்." என்றார் அக்பர்.

              "எங்கள் காரியங்கள் வெற்றியடைய வேண்டுமானால், நாங்கள் கோவிலுக்கு சென்று, நேரடியாக இறைவனிடமே முறையிட்டு கொள்கிறோம். அதனால் நடுவில் ஒருவர் தயவை எதிபார்க்க வேண்டியது இல்லாமல் போகிறது." என்றார் பீர்பால்.

              "மேலும் இறைவன் மேல் நமக்கு ஏற்படும் நம்பிக்கையின் வலுவால் நினைத்த காரியம் வெற்றி பெறும்" என்றும் கூறினார் பீர்பால்.

             "அப்படியானால் அந்த நம்பிக்கையின் பலனை நிரூபித்து காட்ட முடியுமா?" என்றார் அரசர்.

              "நினைத்த காரியம் வெற்றியடைய முழு நம்பிக்கையால் முடியும் என்பதை என்னால் நிரூபிக்க முடியும்" என்றார் பீர்பால்.

             "எவ்வளவு கால தாமதம் ஆனாலும் பரவில்லை. நீ செய்து காட்டு" என்று கூறினார் அக்பர்.

              ஒரு நாள் பீர்பால் அரசரின் மிதியடிகளை திருடிச் சென்று விட்டார். பீர்பால், அதனை ஒரு பட்டுத் துணியால் மூடி, இரவு நேரத்தில் யாரும் அறிய வண்ணம், நகரின் வெளிப்புறத்தில் ஓர் மரத்தடியில் புதைத்தார். அதன் மேல் ஓர் அழகிய சமாதியை எழுப்பினார். அந்த சமாதியின் அருகே சாம்பிராணி புகை போடவும், வரும் பக்தர்களை கவனிக்கவும் ஆட்களை நியமித்தார்.

             " இது யாருடைய சமாதி என்று யாரும் கேட்டால், இவர் ஒரு பெரிய மதகுரு என்று சொல்லிவிட வேண்டும். இதை வணங்கி விட்டு செல்பவர்களின் காரியங்கள் சித்தி அடைகின்றன என்றும் கூற வேண்டும்" என்று சொல்லி வைத்தார். அதன்படி வேலையாட்கள் நாதனது கொண்டனர்.

             நாளாக நாளாக மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தார்கள். தங்களின் காரியங்கள் நிறைவேறியவர்களின் காணிக்கை பொருட்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன.

              இந்த சமாதியின் சிறப்பை அரசரும் கேள்விப்பட்டார்.

             ஒரு நாள் நமது மந்திரி, அதிகாரிகளோடு அரசர் அந்த சமாதிக்கு வந்தார். அப்போது அக்பர் பீர்பாலிடம் "பீர்பால், எங்கள் மதகுருவின் மகிமையை பார்த்தாயா? அவர்கள் உயிரோடு இருந்தாலும் சரி, அல்லாவிடம் சென்றாலும் சரி அவர்களுடைய புகழ் அழிவதில்லை. அவர்களுடைய சக்தி, அவர்கள்  இருந்தாலும் இறந்தாலும் இறவாப் புகழை கொடுக்கிறது".

              "ஆதலால் நீயும் இதை வணங்கு, நமது கவலைகள் மறையும். நமது எண்ணங்கள் ஈடேறும், மன அமைதி உண்டாகும்" என்று கூறினார் அக்பர்.

             "அரசே, உங்களுடைய ஆசைகளை இந்த மகான் நிறைவேற்றி வைத்தால், நிச்சயம் நான் இதை வணங்குவேன்" என்றார் பீர்பால்.

              "இன்னுமா உனக்கு நம்பிக்கை வரவில்லை? இதோ உன் எதிரிலே வேண்டிக் கொள்கிறேன். மகானே, மேவார் மன்னன் பிரதாப சிம்மனை நான் வெற்றிகொள்ள தாங்கள் அருள் புரிய வேண்டும்."




             "வெற்றி பெற்றால் தங்கள் சமாதிக்கு விலை உயர்ந்த ரத்தினக் கம்பளம் பரிசளிக்கிறேன்" என்று சமாதியின் முன் மண்டியிட்டு வேண்டிக் கொண்டார்.

              அப்போது ஒரு குதிரை மீது படைவீரன் ஒருவன் வந்தான். அவன் அரசன் முன் மண்டியிட்டு வணங்கி விட்டு, "சக்கரவர்த்தி அவர்களே, மேவா மன்னன் பிரதாப சிம்மன் தோற்றுவிட்டான். நமது வீரர்கள் வெற்றிபெற்று, அவனையும் கைது செய்து உள்ளார்கள்." என்று கூறினான்.

             அதை கேட்ட அரசர் மகிழ்ச்சி கடலில்  ஆழ்ந்தார். அவ்வீரனுக்கு தனது முத்து மாலையை பரிசாக அளித்தார்.

              பின் பீர்பாலை நோக்கி, "பீர்பால், இப்பொழுதாவது இந்த மதகுருவின் மகிமையை ஒப்புக் கொள்கிறாயா?" என்றார்.

              "இதை கூட நான் மகானின் அருள் என்று கொள்வதற்கில்லை. உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் பயன் தான் உங்கள் வெற்றி என்றே கருதிகிறேன்." என்றார் பீர்பால்.

              "நீ உன் பிடிவாதத்தை விடு, இப்படிப்பட்ட மகானின் சமாதிக்கு நீ வணக்கம் செய்யாவிட்டால், உனக்கு மரண தண்டனை விதிப்பேன்" என்று கோபத்துடன் கூறினார் அக்பர்.

             உடனே பீர்பால் சமாதியின் முன் மண்டியிட்டார். என் மீது என் அரசர்
எக்காலத்திலும் கோபம் கொள்ளாமலும், எனக்கு எவ்வித தண்டனை அளிக்கமாலும் அருள வேண்டும். அப்படி அருளினால், தங்கள் சமாதியை மேலும் அழகிய முறையில் கட்டுகிறேன்." என்று வேண்டிக் கொண்டார் பீர்பால்.

             "இப்பொழுதாவது உனக்குப் புத்தி வந்ததே! உன் கோரிக்கையை மகான் நிச்சயம் நிறைவேற்றுவார்" என்றார் அக்பர்.

             உடனே பீர்பால் சமாதியின் மேலுள்ள மலர்களை அகற்றுமாறு அங்குள்ள வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டார். அதைக் கண்ட அரசர் கோபமுற்றார். பீர்பால் அக்பரை நோக்கி,

             "அரசே! உங்கள் மகான் மகிமை வாய்ந்தவர். உங்களுடைய கோபத்திலிருந்து நிச்சயம் என்னைக் காப்பார்" என்று கூறியபடி பீர்பால் சமாதிக் கற்களை அகற்றி விட்டு, அதனுள்ளிருந்த பட்டு மூட்டையை எடுத்து வந்து அரசரின் முன்னால் வைத்து அவிழ்த்தார்.

             அந்த மூட்டைக்குள், முன்பு காணாமல் போன அரசரின் மிதியடிகள் இருந்தன. அதைக் கண்ட அரசர் "இவை என்னுடைய செருப்புகள் அல்லவா?" என்று வியப்போடு கேட்டார்.

             "ஆம் அரசே! இதைத்தான் இவ்வளவு நாட்களாக மக்கள் நம்பிக்கையோடு வணங்கி வந்தனர். தாங்களும் மண்டியிட்டு வணங்கினீர்கள். என்னையும் வணங்க வைத்தீர்கள்" என்றார் பீர்பால்.

             "என்னுடைய வேண்டுதல் உடனே பலித்ததே அது எப்படி?" என்று கேட்டார் அக்பர்.

             "அதுதான் அரசே, நம்பிக்கை! தாங்கள் உண்மையாக இது மகானின் சமாதி என்று பெரு நம்பிக்கை கொண்டு வேண்டினீர்கள். இதே போலத்தான் நாங்களும் எங்கள் கோவில்களில், கடவுளை நம்பி வழிபடுகிறோம். அதனால் காரிய சித்தியடைகிறோம்"

             "பலர், பல விதமான உருவங்களை அமைத்துக் கொண்டு வழிபடுவதும், சாணம், மஞ்சள் போன்றவற்றை பிடித்து வைத்து வழிபடுவதும், இவை எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில்தான். உருவம் பலவானாலும், இறைவன் மேல் ஏற்படும் பெரும் நம்பிக்கையால் சித்தியடைகிறோம்" என்றார் பீர்பால்.

             அரசர் அவருடைய அறிவார்ந்த விளக்கத்தைக் கண்டு அக மகிழ்ந்தார்.